Monday, October 5, 2009

குறளில் மேலாண்மை


தொடக்கத்திலும் முடிவிலும் பிரபஞ்சம் ஒருமை நிலை கொண்டிருக்கலாம் அந்த நிலை இடம் -காலம் என்பதன் எல்லை அறிவியல் அங்கு உடைபபடுகிறது” - ஸ்டீவந் ஹாவ்க்ிங்ஸ்.அந்த ஒருமை நிலையின் முந்தைய நிலை அறிவியலால் விவரிக்க இயலாது ஆனால்’ -வில் எழுத்துக்கள் தொடங்குவது போல் ஆதிபகவன்முதற்றே உலகு என விஞ்ஞானிகள் 2100 ஆண்டுகளுக்கு பின்பு செய்யும் விவாதங்களுக்கு ஒரு தீர்மானமான விடையை தருகிறார் வள்ளுவர் இரண்டே அடிகளில்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி


பகவன் முதற்றே உலகு


வள்ளுவர் சிந்தனை படராத பிரிவுகளே இல்லை, இதில் மேலாண்மை விதிவிலக்கல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தமிழர்களுக்கு அரசியல், அமைச்சியல், நிர்வாகம், நிதயியல், முடிவெடுத்தல், திட்ட நிறைவேற்றல்களில் உறுதுணையாய் இருந்தது குறள். மனித வாழ்வை அறம், பொருள், இன்பம் இதன் வாயிலாய் விழையும் வீடு அகிய நான்கில் அடக்குகிறார் வள்ளுவர்,எனவே தான் காந்தி "குறளை அதன் இயல் மொழியில் படிக்க தமிழை கற்க விரும்புகிறேன்" என்றார் போலும்.

மேலாண்மையியல்

மேலாண்மையியல் சன் ட்சூ, வள்ளுவர், மாக்கிவேலி, ஆடம் சுமித்,வரிசையில் பொலிவுற்றது இருபதாம் நூற்றாண்டின் அறிஞர்கள் டெய்லர், கில்பர்த், மற்றும் எல்டன் மயொவிற்கு பிறகுதான்.கடைசி 50 ஆண்டுகளில் இத்துறயின் வள்ர்ச்சி அளப்பறியது.
மேலாண்மையியல் தூண்களாக, 1). வழிகாட்டல், 2). ஒருங்கிணைத்தல் மற்றும் கட்டுபடுத்தல் எனலாம்.நன்கு தூண்கள் பொருட்பால் முழுவதும் ஊடும் பாவுமாக விரவிக் கிடந்தாலும் அமைச்சு அதிகாரக் குறள்
இதை சுருக்கமாக உரைக்கிறது.
 
    தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்


     சொல்லலும் வல்லது அமைச்சு.



ஆளுமை உடைய அமைச்சனானவன் செய்யத்தக்க செயலை (1). திட்டமிட்டு ஆராய்ந்து அதற்கான (2). வழிகளையும் (3). நடத்த வேண்டிய முறைகளையும் அறிவுறுத்தி கட்டுப்படுத்தும் விதத்தில் துணிவாக கூறுவதும் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
தலைமை பண்புகள்

தலைவன் தூயவனாய் இருத்தல் வேண்டும் தலைவனிடம் குறைபாடு உண்டானால் அதுமதிக்கண் மாறுபோல்அனைவருக்கும் தெரியும் என்று பொது வாழ்வில் தூய்மையை வலியுறுத்துகிறார். தலைவனக்கு தேவையான குணங்களான ஒற்றுமையுடன் வைத்தல், பணிவு, நடுநிலைமை, துணிவு, பெருமை, ஆகியவற்றை கூறுகிறார்,

887    செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே


           உட்பகை உற்ற குடி.



985    ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்


           மாற்றாரை மாற்றும் படை.

382    அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்


           எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

என தலைவனுடைய பண்புகளை கூறுகிறார். மேலும்
  கட்டளைக்கு கீழ்படிதலை

891     ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்


           போற்றலுள் எல்லாம் தலை.
என்கிறார்
 
பொருளதாரம்
ஒரு பொருளின் உற்பத்தி அல்லதுகிடைத்தல்அதிகமாகும் போது அதன் விலை குறைவதைமேலதிக மதிப்பு குறைதல்” (diminishing marginal utility) எனும் விதியால் பொருளாதாரத்தில் விவரிக்கின்றனர். பசியாய் இருக்கும் பொது உண்ணும் முதல் ஆப்பிளின் மதிப்பு பசி தீர்ந்த பின் உண்ணும் கடைசி ஆபிளுக்கு இல்லாதிருப்பதை இதற்கு உதாரனமாக கூறுவார்கள்.
வள்ளுவர் இதைஅச்சிறும் அப்பண்டம் சாலமிகுத்து பெயின்என்கிறார் அது மயில் பீலியினால் ஆன வண்டியாய் இருந்தாலும் அதிகமானால் அச்சு முறியும் என்கிறார்.
௪௭௫     பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்


              சால மிகுத்துப் பெயின்.

மனித வளம்

              குறளில் மனித வள மேம்படுத்தல் உக்திகளாககூறப்பட்டுள்ளவற்றை திரூ. வே. இறையன்பு அவர்கள் உருவகப்படுத்தி ஒரு கட்டுரை படைத்துள்ளார் அதில் மனித வளத்தின் தூண்களாக 1). பனி அமர்தல், 2). மேம் படுத்தல் 3). தலைமை பண்புகள் மற்றும் அவற்றை பராமரித்தலை பின்வரும் குறள்களில் இருந்து  கூறுகிறார்.
510         தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்


               தீரா இடும்பை தரும்.

511           நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த


                தன்மையான் ஆளப் படும்    
 
பயிற்சியினால் பணியமர்த்த பட்டவரை மேம்படுத்துவதை வள்ளுவர் யானை   வாயிலாக விவரிக்கிறார். பயிற்சி அற்ற காட்டு யானை அளவிற் பெரியதாயினும் புலிக்கு பயப்படும்.

   599          பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

                  வெருஉம்   புலிதாக் குறின்
அதே நேரத்தில் நன்கு பயுற்றுவிக்கப்பட்ட நாட்டு யானைபுதையம்பில் பட்டுப் பாடடூன்றும்

என்கிறார் இதன்முலம் பயிற்சியினால் மேம்பாட்டை விளக்குகிறார் வள்ளுவர்,
தலைமை பண்புகளையும் முன்பு குறிபிட்டது போலவும் பரமரிதலை பின்னூட்டு (feed back )மற்றும் அதிகார பகிர்வு முதலியவற்றை ஒற்று அதிகரதிலும் உணர்த்துகிறார் வள்ளுவர் .
கருத்து பரிமாற்றம் என்பது மேலாண்மையியலில் மிக முக்கியமானது அதிலும் கருத்து பரிமாற்றத்தின் செறிவை பின்னூட்டின் முலமே அறியலாம் இதை,
588           ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்


              ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

என அனைவரையும் ஒற்றாள சொல்லுகிறார்


தண்டனைகள்
    
      ஒரு கடினமான ஒரு தண்டனையை தரும்போதுகடிதோச்சி மெல்ல எறிஎன்கிறார் பெரிதானது போல் காட்டி சிறிய தண்டனையை வழங்க கூறுகிறார்.தண்டனை தருவது குற்றத்தை குறைக்கும் என்பதையும் பயிரை காக்க களைநீக்குவதற்கு ஒப்பிடுகிறார் மேலும் தண்டனைகள்
தருவது ‍ "வடுவன்று ‍‍_வேந்தன் தொழில்" என்கிறார் .

549    குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்


               வடுவன்று வேந்தன் தொழில்.
 
 ஊக்க மூட்டல்
          “Freakonmics” எனும் புத்தகத்தில் Steven. D. Levid அனைத்து செயல்களுக்கும் அச்சாக கூறுவது ஊக்குவிப்பு, சலுகைகள்(incentive) இதை வள்ளுவர்,
.

அனைவரையும் சமமாக நடத்தாமல் அவரவர் செயலுக்கு சிறப்புக்கு தகுந்தாற் போல் செயல் பட வேண்டும்.
528              பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
                    அதுநோக்கி வாழ்வார் பலர்

மேலும் கருத்துக்களை கோர்வையாக இனிமையாக சொல்பவர் சொல்லை உலகம் கேட்டு ஏவல் புரியும் என்பதை,
   648             விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது


                  சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

முடிவெடுத்தல்
ஒரு நிறுவனத்தின் நகழ்காலத்தின் மட்டுமன்றி எதிர்காலத்தின் இலாப நட்டங்களை முடிவு செய்வது அவ்வப்போது எடுக்க வேண்டிய தகுந்த முடிவுகள் ஆகும்.
மேலாண்மையில் அதற்காக நிறைய வழி முறைகளை காண்கின்றது. அனால் அவற்றின் சாராம்சத்தை சொல்லவல்ல அளவு அழமான சிந்தனைகளை ஓட விட்டு இருக்கிறார் வள்ளுவர்.தெரிந்து செயல் வகை அதிகாரத்தில் எந்த ஒரு வெண்பாவை எடுத்தாலும் அது மேலாண்மையில் முடிவெடுத்தல் தேற்றங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் படி இருக்கிறது.
முடிவுகளின் எதிர்கால தன்மைகளை

   463        ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை


           ஊக்கார் அறிவுடை யார்.


என்கிறார்.
சில குறிபிட்ட துறையை சார்ந்த முடிவுகளை அந்தந்த துறை நிபுணர்களின் அறிவுரையை கேட்டு செய்யும் டெல்ஃபி முறையை
462    தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு


           அரும்பொருள் யாதொன்றும் இல்

என சொல்லுகிறார்.
நன்கு ஆராய்ந்து செய்யும் Brain Storming என்பதைவகையற சூழுதல்என்கிறார் அதன் கலைச்சொல்லை தமிழுக்கு தந்து
466    செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க


         செய்யாமை யானுங் கெடும்
 
எனும் குறளின் மூலம் commission & Omission என்று பெரிதாக விவாதிக்க படும் தவறுகளின் வகைகளை விவரிக்கிறார்.
       குறளின் மகிமையை அதை கற்றவர்களுக்கு அது சரியான நேரத்தில் வந்து உதவத்தகுந்த ஈரடிகளே. மேல்நாட்டு அறிஞர்களின் மேலாண் தேற்றங்களை விட தமிழ் தெரிந்த மேலாளனுக்கு குறளே உற்ற துணை.

நிதி மேலாண்மை

ஒரு நிறுவனத்தின் சமுக கடமையாக பலவற்றை கூறுவர். நிறுவனம் லாபகரமாக நடத்தபடுவதே நிறுவனத்தின் கடமை என்று ஒரு சாராரும், லாபம் மட்டுமின்றி சமுக சேவை மற்றும் முன்னேற்றங்களின் ஈடுபடுவதும் நிறுவனத்தின் கடமை என ஒரு சாராரும் விவாதிக்கும் வேளையில்,

  1003             ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்


                     தோற்றம் நிலக்குப் பொறை.

என்று பொருளீட்டல் மட்டுமின்றி புகழ் தரும் காரியங்களிலும் ஈடு பட சொல்லுகிறார்.
Marcolitz மற்றும் மில்லர் அவர்கள் கூறிய Capital Asset Pricing  Model (CAPM) கூற்றுப்படி ஒரு பங்கின் எதிர்கால சந்தை மதிப்பை,
E = Rf + ß (Rm – Rf).
எனும் சூத்திரம் மூலம் அறியலாம்.
E = எதிர்கால சந்தை மதிப்பு.Rf = Risk Free Return – வங்கி வட்டி.ß = பங்கு மதிப்புக்கும் மாற்றத்துக்கும் சந்தை மதிப்புக்கும் மாற்றத்துக்கும் உள்ள விகிதம்.Rm = Market Return.
இதில் உள்ள மாறிகளை மட்டும கணக்கில் எடுத்தால் பாது காப்பான வரவுக்கு மேல் வரும் லாபம் (Rm-Rf). மற்றும் ß அல்லது Risk (அழிவு) ஆகியவை.
461                      அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்


                       ஊதியமும் சூழ்ந்து செயல்.


இந்த குறளை படிப்பவர்கள் இந்த சூத்திரத்தை ஒப்பிட்டு நோக்கும் போது CAPM மனதில் வரும், இது பங்கு சந்தைக்காக சொல்லப்படவில்லை, முடிவேடுதலுக்காக சொல்லப்பட்ட்து என்றாலும்
இதில் அழிவதும் என்பது Risk அல்லது ß வையும், ஆவது வரவையும் ( returns ), ஆகி வழி பயக்கும் ஊதியம் வங்கி வட்டிக்கு மேலான லாபத்தையும் குறிக்கிறது எனலாம்,

டிவிடென்ட் முடிவுகள்

லாபத்தில் பங்கு கொடுப்பது பற்றிய முடிவு எடுப்பது சிக்கலான விடயம் ஒரு நிறுவனத்தால் எப்பொழுது அதிகமான வரவை (Return) தர முடியுமோ அந்த சமயத்தில் லாபத்தை மறு முதலீட்டிற்காக வைத்து கொள்ளலாம் அவ்வாறு இயலாதெனின் அதை லாபத்தில் பங்காக பங்குதாரருக்கு தரவேண்டும்.

1005     கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய


             கோடியுண் டாயினும் இல்.

என்கிறார்
 
480      உளவரை தூக்காத ஒப்புர வாண்மை


              வளவரை வல்லைக் கெடும்.
 
சந்தை &  விற்பனை மேலாண்மை
 
இவற்றிற்கான மூல மந்திரங்களை இடன் அறிதல், காலம் அறிதல், வலியறிதல், அதிகாரங்களை விவரமாக கூறுகிறார்,

482    பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்


     தீராமை ஆர்க்குங் கயிறு.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் என்று பருவ கால வியாபரத்திற்க்கும்

காலத்திற்கு

 490      கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்


     குத்தொக்க சீர்த்த இடத்து.
குறளையும்,
 இடத்திற்கு
496    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்


          நாவாயும் ஓடா நிலத்து.
500     காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா


         வேலாள் முகத்த களிறு.
குறளையும்,

சந்தை ஆராய்ச்சிக்காக 
 
584    வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு


          அனைவரையும் ஆராய்வது ஒற்று.
குறளையும், உதாரணமாக கூறலாம்.



திட்டப்பணிகள் (Project) மேலாண்மை

675      பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்


            இருள்தீர எண்ணிச் செயல்.

இதற்கு தேவையானவகையாக பொருள், கருவி, வினை இடம் காலம் என்கிறார் மேலும்
 
605   நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்


            கெடுநீரார் காமக் கலன்.


விளம்பரங்கள்
இன்று மிக பிரபலமாக காணப்படும் விளம்பரங்களையும் அதற்கு தேவையானவற்றையும் வள்ளுவர் யோசிக்க தவறவில்லை இதை தூது அதிகார குறள்கள் விளக்கும்

685      தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி


            நன்றி பயப்பதாந் தூது
 
பலவற்றை தொகுத்து மகிழ்ச்சி மனதில் பதியும் படி செய்தல் வேண்டும். இன்றைய ஆராய்ச்சிகள் மகிழ்ச்சியான மனநிலையை உண்டாக்கும் விளம்பரங்களே வெற்றி பெறுகிறது என திண்ணமாக கூறுகிறார்.

687    கடனறிந்து காலங் கருதி இடனறிந்து


           எண்ணி உரைப்பான் தலை.

இன்று தொலைக்காட்சி விளம்பரங்களில் முக்கியமான மதிப்பை கொடுக்கும் TRP ( Total rating Point), GRP ( Gross rating Point) போன்றவற்றை பயன்படுத்தி தமக்கு தேவையான குறிபிட்ட பார்வையாளர்களை அடைய சரியான நேரத்தையும் இடத்தையும் பயன்படுத்தி கொள்கின்றனர்.
மேலும் brand ambassodor  மற்றும் வரவேற்பாளர் குணங்களை

684      அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்


            செறிவுடையான் செல்க வினைக்கு.

அறிவு, அழகு, அறிவு, கல்வி (துறையில் திறமை மேன்மையாக) வேண்டும் என்கிறார்.

பொருளாதார மந்த நிலை

பொருளாதார மந்த நிலையில் அதிகமாக பயன்படுத்தபடும் மறு பொறியியல் மற்றும் செலவு குறைப்பு ஆகியவற்றை

478    ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை


        போகாறு அகலாக் கடை. 
 
வரவு குறைந்தாலும் செலவு மிகாமல் இருந்தால் போதும் என்கிறார்

மொத்தத்தில் மேலாண்மையில் கடந்த 50 வருடங்களில் வளர்ச்சி பெற்றுள்ளது. திருக்குறள் ௦௦௦ 2000 வருடங்களுக்கு முன்பே அதை கூறி உள்ளது. இந்த கட்டுரையில் பார்த்தது போல பல கருத்துக்கள் முன்பே கூற பட்டுள்ளது. இவற்றை நாம் சரியான பார்வையில் நோக்கி இருந்தால் மேலாண்மையில் உள்ள சில தேற்றங்களை நாம் உலகுக்கு சொல்லியிருக்கலாம்.குறளை ஆழ்ந்து பார்க்கும் போது மேலாண்மை பற்றிய புதிய தேற்றங்களை உலகுக்கு தமிழர்கள் சொல்ல முடியும் என்பது திண்ணம்.

நன்றி




பதிவுகள் எழுத உந்துதலாய் இருந்த நண்பர் கதிரவனுக்கும், இந்த பதிவை சமயத்தில் வெளியிட உதவியாய் இருந்த நண்பர் கோபிநாதன் கணேசன், மற்றும் அண்ணன் ஸ்ரீகணேசன் அவர்களுக்கும் மணற்கேணி 2009 இணையத்திற்கும் நெஞ்சர்ந்த நன்றி.

1 comment: